மத்திய அரசு மார்தட்டியது போல பணமதிப்பிழப்பு நடவடிக்கை நக்சல்களை முடக்கவில்லையே!
மத்திய அரசு மார்தட்டியது போல பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நக்சல்களை முடக்கவில்லை என்பதையே சத்தீஸ்கர் தாக்குதல் வெளிப்படுத்துகிறது.
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நக்சல்கள் பணமில்லாமல் முடங்கிப்போனதாக மத்திய அரசு மார்தட்டிய சில மாதங்களிலேயே மிக கொடூரமான தாக்குதல் சத்தீஸ்கரில் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் மத்திய அரசின் மிதமிஞ்சிய நம்பிக்கையின் மீது விழுந்த சம்மட்டி அடியாகத்தான் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கருப்பு பணத்தை மட்டுமின்றி பயங்கரவாதத்தையும் ஒழித்து கட்டிவிட்டோம் என பெருமிதப்பட்டுக் கொண்டது மத்திய அரசு.
மேலும் கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பின் மூலம் தாங்கள் பதுக்கி வைத்த பணத்தை மாற்ற வழியில்லாமல் நக்சல்கள் தவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் நக்சலைட்டுகள் முடங்கிப் போய்விட்டனர். இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என கூப்பாடு போட்டார்.
ஆனால் நக்சல்கள் சத்தீஸ்கரில் உக்கிர தாக்குதலை நடத்தி 26 பாதுகாப்பு படையினரை படுகொலை செய்துள்ளனர். அத்துடன் ராணுவ வீரர்களின் உடல்களையும் சித்திரவதை செய்துள்ளனர். பணமதிப்பிழப்புக்குப் பின்னரும் நக்சலைட்டுகளுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?
நக்சல்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் கிடைத்திருக்க வேண்டும்; அதேபோல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள். மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ் உளவு அமைப்பு மூலமாக ஆயுதங்களை நக்சல்கள் கொள்முதல் செய்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
ஆகையால் பணமதிப்பிழப்பு மூலம் சாதித்துவிட்டோம் என பெருமிதம் பேசியதை மத்திய அரசு தவறு என உணரவேண்டும். அத்துடன் நக்சல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் தோல்வியைத் தந்திருக்கின்றன என்பதையும் உணரவேண்டிய தருணம் இது.