குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் மும்பையில் கைதா?
குர்மீத் ராம் ரஹீமின் மகள் ஹனிப்ரீத் இன்சான் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
சண்டிகர் : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குர்மீத் ராம்ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
அரியானா மாநிலம், சிர்ஸாவில் உள்ள தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
ராம் ரஹீமின் ஆசிரமத்தை அவரது மகள் ஹனிப்ரீத் தலைமை ஏற்று நடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் ராம் ரஹீமின் மகள் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தலைமறைவாகியுள்ளார். ரோஹத்கில் தனது தந்தையை பார்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் ஹனிப்ரீத்திற்கு தேரா ஆசிரமம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவருக்கு லக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நலையில் ஹனிப்ரீத் மும்பையில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது உறுதியான தகவல் இல்லை என்றும் அவரைத் தேடும் பணி தொடர்வதாகவும் ஹரியானா போலீஸ் தலைவர் பி எஸ் சந்து கூறியுள்ளார்.