வெடிகுண்டில் இருந்து ரசாயன ஆயுதங்களுக்கு தாவிவிட்டதா ஐஎஸ்ஐஎஸ்?
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை நிராகரிக்க முடியாது. சிரியாவில் உள்ள இட்லிப்பில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு குளோரின் மற்றும் பிற ரசாயனங்களின் வாடை வந்ததாக பலர் தெரிவித்தனர்.
தாங்கள் நினைத்தால் அணுஆயுதங்களை வாங்க முடியும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அண்மையில் தெரிவித்தனர். உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் அணு ஆயுதங்களை வாங்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இட்லிப்பில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நிச்சயம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் ஏராளமான ரசாயன ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்ட அறிக்கையில், அணு ஆயுதங்கள் வாங்க பாகிஸ்தானில் உள்ளவர்களை அணுகினோம். பணம் கொடுத்தால் எங்களுக்கு அணு ஆயுதங்கள் அளிக்க பாகிஸ்தானில் ஆட்கள் உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் என்னவாகும் என்பது தான் கவலையளிக்கும் விஷயம். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிடியில் பல எண்ணெய் கிணறுகள் உள்ளன. தீவிரவாதிகளின் கையில் ஏகப்பட்ட பணம் உள்ளது. அவர்கள் நினைத்தால் எவ்வளவு விலை உயர்ந்த ஆயுதத்தையும் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது.
தீவிரவாதிகள் பழமைவாய்ந்த அருங்காட்சியகங்களுக்குள் புகுந்து சிலைகளை உடைத்தனர். உண்மையில் அவர்கள் விலை மதிப்பற்ற பழங்காலத்து பொருட்களை அங்கிருந்து எடுத்துச் சென்று விற்றதாக கூறப்படுகிறது.