மெளலானா மசூத் அஸார் கைதா, இல்லையா...??
டெல்லி: ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அஸார் கைது செய்யப்பட்டதாக வந்த செய்திகள் குறித்து மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் செய்திகளை உறுதிப்படுத்தாமல் ரியாக்ட் செய்வதில்லை என்று மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பதன்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதலுக்குத் திட்டமிட்டது, அதை அரங்கேற்றியது ஜெய்ஸ் இ முகம்மது அமைப்புதான். அதன் தலைவன் அஸார்தான் இதன் மூளை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான பல ஆதாரங்களையும் அது பாகிஸ்தானுக்கு அளித்திருந்தது. மேலும் பதன்கோட் தாக்குதல் விவகாரத்தை இந்தியா சீரியஸாக எடுத்துக் கொண்டது. அதேசமயம், அமெரிக்காவும் பாகிஸ்தானை மிரட்ட ஆரம்பித்தது.
இதையடுத்து வேறு வழியில்லாமல் பிரதமர் நவாஸ் ஷெரீப், அதிரடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அஸாரின் சொந்த ஊரான பவல்பூர், குஜ்ரன்வாலா, ஜீலம் ஆகிய மாவட்டங்களில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று அஸார் உள்ளிட்டோர் கைதானதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் தரப்பிலிரும் அஸார் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பாரிஸ் சென்றுள்ளார். இன்றுதான் அவர் நாடு திரும்புகிறார். அவர் வந்த பிறகு இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவெடுக்க மத்திய அரசும், பிரதமர் மோடியும் முடிவு செய்துள்ளனர்.
அஸார் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் பதன்கோட் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது இந்தியா.
இந்த செய்தியை உறுதிப்படுத்த சரியான நபர் தோவல்தான் என்று கூறி விட்டாராம் பிரதமர் மோடி. அவர் உறுதிப்படுத்திச் சொல்லட்டும், பாகிஸ்தானுடன் 15ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையைத் தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அதன் பின்னர் முடிவு செய்யலாம் என்றும் பிரதமர் கூறியுள்ளாராம்.
தோவல் தாயகம் திரும்பியதும், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பேசி அஸார் கைது குறித்த செய்தி தொடர்பாக பேசி விவரம் கேட்பார் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.