கடன் கொடுமையால் கர்நாடக வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை - கந்துவட்டிக்காரர் கைது
ஹாசன்: கர்நாடக மாநிலம் ஹாசனில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கந்துவட்டிக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹாசன், சங்கமேஸ்வராநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர், இவர் ஒரு வியாபாரி. இவருடைய மனைவி கருணாராஜ். இவர்கள் 2 பேரும் காதலித்து, கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 7 வயதில் பூமிகா என்ற மகள் இருந்தார். காபி பொடி வியாபாரம் செய்து வந்த ஜெயசங்கர், குறைவான வட்டிக்கு பணம் வாங்கி அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார்.
இதனால் அவர் ஏராளமானோரிடம் கடன் வாங்கி அதனை அதிக வட்டிக்கு வேறு சிலரிடம் கடன் கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஜெயசங்கரிடம் கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஜெயசங்கர் தான் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஜெயசங்கருக்கு பணம் கொடுத்தவர்கள், கடனை திரும்ப செலுத்தும்படி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெயசங்கர் தனது மனைவி, மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார். அதன்படி, ஜெயசங்கர் தனது மனைவி கருணாராஜ், மகள் பூமிகா ஆகியோரை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் ஜெயசங்கர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், பென்சன் மொகல்லா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், அங்கு தூக்கில் பிணமாக கிடந்த ஜெயசங்கர் மற்றும் அவருடைய மனைவி, மகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹாசன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, ஜெயசங்கர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், "எங்கள் பகுதியை சேர்ந்த ரகு என்பவரிடம் ரூபாய் 18 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தேன். அந்த பணத்தை நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வட்டியுடன் திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால் அவர், மேலும் ரூபாய் 3 லட்சம் வட்டி பணம் தரவேண்டும் என்று கூறி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார். மேலும் நள்ளிரவு நேரத்தில் எனது வீட்டுக்கு வந்து மிரட்டினார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். எனவே நாங்கள் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்கிறோம். எங்களது சாவுக்கு ரகு தான் காரணம். அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பென்சன் மொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்துவட்டிக்காரர் ரகுவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜெயசங்கர் வேறு யார், யாரிடம் கடன் வாங்கி உள்ளார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் மனைவி, மகளை கொன்றுவிட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாசன் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.