தொப்பி என்றாலே எம்ஜிஆர்தான்.. அதனால் சின்னத்தைக் கேட்டு வாங்கினோம்.. தம்பிதுரையின் அசால்ட் விளக்கம்
தேர்தல் ஆணையம் அதிமுக சசிகலா அணியினருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கியிருப்பதற்கு லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அசால்ட் விளக்கம் கொடுத்து அசத்தி இருக்கிறார்.
டெல்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் போட்டியிடும் சசிகலா அணியினருக்கு தேர்தல் ஆணையம் தொப்பி சின்னம் ஒதுக்கியுள்ளது. இதனை தாங்கள்தான் கேட்டு வாங்கியதாக லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ் அணியினரும் சசிகலா அணியினரும் தாங்கள்தான் உண்மையான அதிமுகவினர் என்று சொல்லி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
தேர்தல் ஆணையமோ சசிதரப்பினருக்கு தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் அணியினருக்கு இரட்டை விளக்கு மின்கம்பத்தையும் தேர்தல் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த சின்னங்களை வைத்துத்துதான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை இரு அணியினரும் சந்திக்க வேண்டும். இந்நிலையில், தொப்பி சின்னம் குறித்து சசிகலா ஆதரவாளர் எம்பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எம்ஜிஆர் அதிமுக
அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. அதில் எந்தப் பிளவும் கிடையாது. அக்கட்சியின் வேட்பாளராக டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை போட்டிருக்கிறது. அதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.
நீதிமன்றத்திற்கு செல்ல..
சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு உண்டு. இருந்தாலும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு எதிராக உத்தரவிட்டுள்ளது. இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் எங்களால் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை.
இடைக்கால ஏற்பாடு
அதனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்றுக் கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலில் நாங்கள் இருக்கிறோம். கட்சியின் பெரும் ‘அதிமுக அம்மா' என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒரே நாளில் ஒரு முடிவிற்கு வர முடியாத காரணத்தால் இந்த இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நிரந்தரம் கிடையாது.
மீண்டும் இரட்டை இலை
அதிமுக இதுபோன்ற பல சோதனைகளை சந்தித்திருக்கிறது. அதில் இருந்தெல்லாம் வென்று வெற்றி நடை போட்டது அதிமுக. இரட்டை இலை சின்னம் ஒரு காலத்தில் முடக்கப்பட்டு மீண்டும் கிடைத்தது. அதே போல தற்போது முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் அடுத்த மாதத்தில் மீண்டும் எங்களுக்கே கிடைத்துவிடும்.
1 லட்சம் வாக்கு
எனவே, தமிழக மக்களோ, அதிமுக தொண்டர்களோ இரட்டை இலை குறித்து ஐயம் எழுப்பத் தேவையில்லை. எது எப்படி இருந்தாலும், எங்களுடைய வேட்பாளர் டிடிவி தினகரன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவார்.
தொப்பி என்றால் எம்ஜிஆர்
பல படங்களில் எம்ஜிஆர் தொப்பி போட்டு கொண்டு பாட்டுப்பாடி நடித்திருக்கின்றார். எனவே, தொப்பி சின்னம் பலருக்கும் தெரிந்த சின்னம். அதனால்தான் தேர்தல் ஆணையத்திடம் இந்த சின்னத்தை கேட்டுப் பெற்றோம். அதனால் இந்த சின்னத்தில் போட்டியிடும் தினகரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று தம்பிதுரை கூறினார்.