ஹத்ராஸில் மேலும் ஒரு கொடுமை...6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உயிரிழப்பு!!
ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்தார். இந்த காயம் ஆறுவதற்கு முன்பு அதே மாவட்டத்தில் 6 வயது பெண் குழந்தையை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து இறந்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.
இந்த சிறுமியை அலிகார் மாவட்டத்தில் இருக்கும் இக்லஸ் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் அடைத்து வைத்து கடந்த மாதம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார். உள்ளூர் சமூக தொண்டு நிறுவனம் எச்சரிக்கை செய்த பின்னர் அவரை மீட்டு போலீசார் செப்டம்பர் 17 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்த்தனர்
இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அந்த சிறுமி ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் 15 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுமியின் தாய் வழி மாமா இந்த குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இதையடுத்து அவர் தலைமறைவு ஆகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி.. பயங்கரமானது.. ஹத்ராஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து.. சாட்சிகளை பாதுகாக்க உத்தரவு
முதலில் அலிகாரில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு டெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீசாரைக் கண்டித்தும், பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யும் வரை சிறுமியின் உடலை வாங்கப் போவதில்லை என்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குற்றம் செய்தவரை விட்டு விட்டு வேறு நபரை கைது செய்து இருப்பதாக சிறுமியின் தந்தை புகார் அளித்து இருந்தார். இதையடுத்து, போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சிறுமியின் உடலை வாங்கி பெற்றோர் இறுதி சடங்குகள் செய்தனர்,