கு.க. பண்ணிக்காதீங்க, நிறைய பெத்துக்கங்க.. சந்திரபாபு நாயுடு "அட்வைஸ்"!
ஹைதராபாத்: குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளாதீர்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அட்வைஸ் செய்துள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர் என்று கூறி ஊர் ஊராக சிவப்பு முக்கோணம் வரைந்து குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் செய்தனர். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பது தாரகமந்திரமானது.
ஆனால் இன்றைய அரசியல்வாதிகளோ நான்கு முதல் ஐந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர். அதைவிட ஒருபடி மேலேபோய் குடும்பக் கட்டுப்பாடே செய்ய வேண்டாம், வத வத வென்று பிள்ளைக் குட்டிகளை பெற்றுப் போட்டுக்கொண்டே இருங்கள் என்கிற ரீதியில் பேசியுள்ளார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு.
என்.டி.ஆர் நினைவுதினம்
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த என்.டி.ராமராவ் 18-வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஹைதராபாத்தில் உள்ள என்.டி.ராமராவ் நினைவிடத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
பாதயாத்திரை
என்.டி.ராமராவ் நினைவு நாளையொட்டி 18 கிலோ மீட்டர் தூர பாத யாத்திரையை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். மேற்கு கோதாவரி மாவட்டம் வேலிவேணு கிராமத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் செட்டிவேட்டை, தல்லாபலம், சிங்கவாரா உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பிரமணாகூடம் கிராமத்தில் முடித்தார்.
ஜனத்தொகை பெருக்குங்கள்
இந்த கிராமங்களில் சந்திரபாபு நாயுடு பேசியபோது, ‘'ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெறவேண்டும். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்? நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது ஜனத்தொகையை பெருக்குங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
திருமணம், குழந்தைகள்
இன்று படித்தவர்கள் பலர் திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் செய்து கொண்டால் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவது இல்லை என்று வருத்தப்பட்டார் சந்திரபாபு நாயுடு.
முதியவர்கள் தேசம்
நாட்டில் ஆண்டுக்கு 9 லட்சம் சிசு மரணம் நிகழ்கிறது. இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜப்பானை எடுத்துக்கொண்டால் அங்கு முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர். இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இங்கும் அந்த நிலைதான் ஏற்படுகிறது.
படிப்பு, உணவு
எனவே நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டாம். அதனால் பலன் இல்லை. அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகளின் படிப்பை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான வேலை வாய்ப்பை எனது அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும்'' என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
நம்ம ராமதாஸ் கூட
கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் கூட வன்னியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியிருந்தார்.
நடக்கிற காரியமா?
ஒரு குழந்தையை பெற்று அதை வளர்த்து படிக்க வைப்பதற்கே பெரும்பாடு படுகின்றனர் பெற்றோர். இதில் நான்கு, ஐந்து பெற்றால் அதுவும் நம் செலவிலேயே வளர்த்தால் விற்கிற விலைவாசியில இதெல்லாம் நடக்கிற காரியமா?. அரசியல்வாதிகள் உணர்வார்களா?