அச்சச்சோ.. ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லையா?
ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நபர் வரி ஏய்ப்பாளராக சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டு வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்கிவிடுவார்.
டெல்லி: மத்திய அரசின் உத்தரவான ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரித்துறையின் ஆய்வை சந்திக்க வேண்டியிருக்குமாம்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு நடைமுறைகளும் அன்று முதல் அமலுக்கு வந்தன.
வரி ஏய்ப்பு செய்வதற்காக மக்கள் பல்வேறு பான் எண்களை பயன்படுத்தி வருவதாக வருமான வரித்துறை தெரிவிக்கிறது. அதை தடுக்க பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சட்டம் பிரிவு 139AA-யின்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை எனில், அந்த நபரின் பான் எண் செல்லாததாகிவிடும் என்றும் அறிவித்துள்ளது.
ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒருவர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் அந்த நபர் வரி ஏய்ப்பாளராகவும், வருமானத்தை அரசிடம் மறைப்பவராகவும் கருதப்படுவார்.
பின்னர் எங்கள் துறையின் மீளாய்வுக்குள்படுத்தப்படுவார். 2 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் இறுதியில் வரி செலுத்துவோர் 6.5 கோடி பேராக இருந்தனர். ஆனால் அவர்களுள் 5 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.