பிட்காயினுக்கு மாறும் ஹவாலா ஏஜென்ட்டுகள்... சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை கண்டறிவதில் சிக்கல்!
உலகம் முழுவதும் பிட்காயின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பணப்பரிமாற்றத்தை கண்டுபிடிக்க முடியாத பிட்காயின் முறைக்கு ஹவாலா மற்றும் ஹேக்கர்கள் மாறி வருவதால் விசாரணை நடத்த முடியாமல் திணறும் நிலை
டெல்லி : முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவத்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினால் இந்தியாவில் ஹவாலா ஏஜென்ட்டுகளின் பணப் பரிமாற்றத்தை கண்டு பிடிக்க முடியாமல் விசாரணை ஆணையங்கள் திணறி வருகின்றன.
டெல்லியை சேர்ந்த குற்ற வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது " ஹவாலா ஏஜென்ட்டுகள் பிட்காயின் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் மூலம் எளிதில் பணத்தை மாற்ற முடியும் என்பதை விட அவர்கள் கைக்கு விரைவில் பணம் கிடைத்து விடும் என்பதும் அவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது."
பிட்காயின் மதிப்பானது இணையதளங்களில் உள்ள வாலெட்கள் முறையில் சேமிக்கப்படுகிறது. மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
டிஜிட்டலுக்கு மாறும் ஹவாலா ஏஜென்ட்டுகள்
ஹவாலா பணப் பரிமாற்றமும் தற்போது ஆன்லைன் முறைக்கு மாறி வருகிறது. இந்த புதிய மாறுதலை உள்ளூர் போலீசார் மட்டுமின்றி நாடு தழுவிய விசாரணை அமைப்புகளும் உறுதி செய்கின்றன.
சவாலாக மாறும் பிட்காயின்
இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனை நடைமுறையில் இல்லாததால் இது போன்ற ஹவாலா பணப் பரிமாற்றத்தை கண்டறிவது மிகக் கடினமான விஷயமாக உள்ளது. இதே போன்று கணிணியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் ஹேக்கர்களும் டிஜிட்டல் கரன்சி முறைக்கு மாறி வருகின்றனர். டெல்லி போலீசார் ரேன்சம்வேர் ஹேக்கர்கள் தொடர்பான 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஹேக்கர்களுக்கும் வசதியான பிட்காயின்.
டெல்லியை சேர்ந்த முன்னணி புத்தக பதிப்பு நிறுவனத்தின் இணையதளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் ஹேக்கர்கள். தகவல்களை முடக்கியதோடு, மீண்டும் இந்தத் தகவல்களைப் பெற பிட்காயின் முறையில் பணத்தை செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
விசாரணை அமைப்புகளுக்கு சிரமம்
இதே போன்று ஹார்டுவேர் கடையின் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் 1750 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட்காயின் கேட்டு மிரட்டியுள்ளனர். டெல்லியில் இது போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டு பணட்ம செலுத்துவதற்காக அளிக்கப்பட்ட வங்கி கணக்கு எண் சார்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிய அந்த நபர், தன்னுடைய வங்கிக் கணக்கு யாரோ சிலரால் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனினும் பிட்காயின் பயன்பாடு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் விசாரணை ஆணையங்களுக்கு இவை மேலும் ஒரு சவாலான விஷயமாக மாறி வருகிறது.