சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: ஜெ. தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல், விரைவில் தீர்ப்பு
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா தரப்பின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கின் சூத்திரதாரி சுப்ரமணியசாமி தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்த பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு தேதியை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது 40வது நாளாக கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் செந்தில் ஆஜராகி, 177 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார்.
அதேபோல சொத்து மறு மதிப்பீடு பட்டியல் மற்றும் மார்பல் புனரமைப்பு பணிகள் குறித்த பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில், இரு தரப்பு ஒப்பீடு அறிக்கையும் இன்றைய விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரமணியசாமி
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சுப்பிரமணியசாமி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்யப்படவில்லை. இவர் தரப்பில் ஆஜரான வக்கீல் பவன் சந்திர ஷெட்டி , ஆஜராகி அவகாசம் கேட்டார். சுப்பிரமணியசாமி நாளை (புதன்கிழமை) வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்று கொண்டார்.
கூட்டு சதிக்கு ஆதாரம்
தொடர்ந்து நீதிபதி குமாரசாமி, அரசு வழக்கறிஞரிடம் இதில் கூட்டுச்சதி நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லையே என கேள்வி எழுப்பினார்.
30 ஆண்டுகளாக
இதற்கு பதில் அளித்த பவானிசிங், ஒரு கிரிமினல் வழக்கில் கூட கூட்டுச்சதி என்பதற்கு போதிய ஆதாரங்கள், சூழ்நிலையை கருத்தில் கொண்டே ஏற்று கொள்ளப்படும் . இது போல் ஜெ., சசிகலா, 30 ஆண்டுகளாக சேர்ந்து தான் வாழ்ந்துள்ளனர். எனவே இந்த சூழல் ஆதாரம் போதுமானது என்றார்.
தள்ளுபடி செய்யுங்கள்
இதனையே சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. எனவே ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பவானிசிங் வாதிட்டார்.
ஜெ. வக்கீல்கள் பதில்
தாக்கல் செய்யப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார் மற்றும் செந்தில் பதில் அளித்தனர்.
தண்டனையை ரத்து செய்க
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், அரசியல் காழ்ப்புணச்சி காரணமாக அப்போதைய அதிகாரிகளை வலுக்கட்டாயப்படுத்தி இந்த வழக்கில் எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
அரசு பணியாளர்கள் தவறு
இதற்கு பதில் அளித்த பவானிசிங், அரசு பணியாளர்கள் தவறு செய்தால் செக்சன் 21 ஏ-ன் படி தான் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றார்.
தீர்ப்பு தேதி
புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை நீதிபதி நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.