நடிகர் சல்மான் கான் கார் விபத்து வழக்கு- மேல்முறையீடு மனு மீது நாளை தீர்ப்பு
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கானின் கார் மோதி ஒருவர் பலியான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி அதிகாலை நடிகர் சல்மான்கான் ஓட்டி வந்த கார், பாந்த்ராவில் அவரது வீட்டின் அருகில் உள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் லாண்டரி அருகில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேல்முறையீடு வழக்கில் ஜாமீன் மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி விசாரித்து வருகிறார். மனு மீது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டதால் நாளை தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.