வரி ஏய்ப்பு வழக்கு: கலாநிதி மாறனுக்கு எதிரான சம்மன்களுக்கு டெல்லி ஹைகோர்ட் தடை!
டெல்லி: வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி மாறனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சம்மன்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் தலைவராக கலாநிதி மாறன் பதவி வகித்தபோது 2013-14, 2014-15 ஆகிய நிதியாண்டுகளுக்காக ஊழியர்களின் ஊதியத்தில் முன்கூட்டியே வரிப்பிடித்தம் செய்யும் தொகையை வருமான வரித் துறைக்குச் செலுத்தவில்லை என்பது புகார்.
மொத்தம் ரூ.147 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் நிர்வாக இயக்குநர் நடராஜன் ஆகியோர் மீது வருமான வரித் துறையினர் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜூலை 20, ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் சம்மன்களை அனுப்பியது.
இந்த சம்மன்களுக்கு தடைவிதிக்கக் கோரி கலாநிதி மாறன் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுரேஷ் கெய்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலாநிதி மாறனுக்கு எதிரான சம்மன்களுக்கு டிசம்பர் 21-ந் தேதி வரை இடைக்காலத் தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.