செளமியா கொலை வழக்கு- கோவிந்தசாமி தூக்கை உறுதி செய்தது கேரளா ஹைகோர்ட்
கொச்சியில் வணிக வளாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் செளமியா. கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி அவர் வழக்கம்போல் இரவில் ரயிலேறி வீடு திரும்பும்போது, தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ரயிலில் இருந்து கீழே இழுத்து தள்ளியிருக்கிறார். படுகாயமடைந்த செளமியாவை கோவிந்தசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செளமியா சில நாட்களில் உயிரிழந்தார். கேரளாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக, திருச்சூர் விரைவு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. பின்னர் கோவிந்தசாமிக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பின்னர் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கோவிந்தசாமி, கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், இன்று கோவிந்தசாமியின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டில் 2004 முதல் 2008 வரை 8 வழக்குகளில் கோவிந்தசாமி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.