பெங்களூர் வாடிக்கையாளர்களிடம் ரூ.30 கோடி சுருட்டிய ஹெச்.டி.எப்.சி இன்சூரன்ஸ் மேனேஜர் கைது
பெங்களூர்: வாடிக்கையாளர்களிடம் சுமார் ரூ.30 கோடியை சுருட்டி தலைமறைவான ஹெச்.டி.எப்.சி இன்சூரன்ஸ் நிறுவன பெண் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர், பிடிஎம் லே-அவுட், ஹெச்.டி.எப்.சி இன்சூரன்ஸ் கிளையில், மேனேஜராக பணியாற்றியவர் விசாலாட்சி (41). இவர் வாடிக்கையாளர்களிடம், ப்ரீமியம் தொகை வசூலித்துவிட்டு, அதை வங்கியில் கட்டாமல், தலைமறைவாகிவிட்டதாக போலீசில் புகார்கள் குவிந்தன.
சுமார் ரூ.30 கோடி பணத்துடன் அவர் தலைமறைவாகியிருந்ததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அசாதாரண நிலை நிலவியது. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் தலைமறைவாக இருந்த விசாலாட்சியை கைது செய்துள்ளனர்.
இப்பெண் நவம்பர் 30ம் தேதி, தனது கணவருக்கு அனுப்பிய இ-மெயிலில் என்னை இனி தேடாதீர்கள். நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப்போகிறேன் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர், போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, இ-மெயில் அனுப்பப்பட்ட இடத்தை கண்டுபிடித்து போலீசார் விசாலாட்சியை கைது செய்துள்ளனர்.