மும்பை தாக்குதலின் முக்கிய புள்ளி பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி: ஹெட்லி ஒப்புதல்
மும்பை: மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புள்ள நபரான சாஜித் மிர், பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்ற தகவலை தீவிரவாதி டேவிட் ஹெட்லி வெளியிட்டுள்ளார்.
மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய கசாப் உயிரோடு பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட நிலையில், தாக்குதலின் சூத்திரதாரி டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் வேறு ஒரு வழக்கில் பிடிபட்டார். விசாரணையின்போது, மும்பை தாக்குதலின் மூளையாக ஹெட்லி செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அமெரிக்காவில், பெயர் தெரிவிக்கப்படாத இடத்தில் இருந்தபடி, மும்பை நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, ஹெட்லி இன்று நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதியின் கேள்விகளுக்கு ஹெட்லி பதிலளித்தார். இந்திய நேரப்படி காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை வீடியோ கான்பரன்சில் விசாரணை நடைபெற்றது.
அப்போது ஹெட்லி, சாஜித் மிர் என்பவர் பெயரை அவ்வப்போது கூறிவந்தார். இருப்பினும் சாஜித் மிர் குறித்த முழு தகவல்களை அவர் வெளியிடவில்லை.
மும்பை குண்டு வெடிப்புக்கு ஹெட்லி மூளையாக இருந்தாலும், இந்த சாஜித் மிர்தான், ஹெட்லியின் ஸ்பெஷல் ஏஜென்ட்டாக செயல்பட்டுள்ளார். மும்பை குண்டு வெடிப்பு நடந்த அடுத்த நாளில், பாகிஸ்தானில் சாஜித் மிர் அந்த நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், அதன்பிறகு விடுதலை செய்யப்பட்ட சாஜித் மிர் தற்போது எங்குள்ளார் என்ற தகவல் மர்மமாக உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர்தான் இந்த சாஜித் மிர். பின்னர் அந்த நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் இணைந்து மிர் பணியாற்றினார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை விரிவுபடுத்தும் பொறுப்பை ஐஎஸ்ஐ அமைப்பு, மிர்ரிடம் ஒப்படைத்திருந்தது. இதற்காக மிர் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து தனது இயக்கத்திற்கு ஆள் பிடித்துள்ளார்.
மும்பை தாக்குதலுக்கான பொறுப்பும் மிர்ரிடம் ஹெட்லியால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தாக்குதல் வழக்கில் சாஜித் மிர் ஒரு முக்கியமான நபராகும். ஹெட்லியின் ஸ்பெஷல் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் மிர் குறித்த மேலதிக தகவல்களை நாளைய விசாரணையின்போது ஹெட்லி கூறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.