என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் 'லஷ்கர்' இயக்க தற்கொலைப்படை தீவிரவாதி: ஹெட்லி திடுக் தகவல்
டெல்லி: குஜராத் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப்படை தீவிரவாதிதான் என மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டேவி ஹெட்லி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006ஆம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் குஜராத் போலீசாரால் அகமதாபாத் புறநகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். குஜராத் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என்று இஷ்ரத்தின் குடும்பத்தினரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்த போலி என்கவுண்ட்டர் வழக்கில்தான் தற்போதைய பா.ஜ.க. தலைவரும் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதேபோல் காவல்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் பலரும் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா சிறையில் உள்ள மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஹெட்லியிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். அந்த விசாரணையின் போது இஷ்ரத் ஜகான், லஷ்கர் இ தொயா இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி என ஹெட்லி உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஹெட்லி அண்மையில் மும்பை நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி அப்ரூவரானார். அவருக்கு நீதிமன்றம் மன்னிப்பு வழங்கி சாட்சியமாக்கி உள்ளது. இனி ஹெட்லியிடம் நடத்தப்படும் விசாரணையில் இஷ்ரத் ஜகான் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.