மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி டிஸ்மிஸ்
ராஜஸ்தான் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்ததால் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறியதை அடுத்து அந்த தலைமை ஆசிரியர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ராஜ்சமந்த் மாவட்ட கல்வி அதிகாரி மதுசூதன் வியாஸ் கூறியிருப்பதாவது:
இந்த விவகாரம் மாவட்ட கல்வி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதால் பாலியியல் புகாருக்குள்ளான ஆசிரியர் அந்த மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கெல்வா நகர அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் வினோத் ரோகில்லா மீது கேலி-கிண்டல் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அவரது பெற்றோர்களிடம் அந்த தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார். அவர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி முறையிட்டனர்.
அதன்பேரில் மாவட்ட கல்வி நிர்வாகம் பள்ளி தலைமை ஆசிரியர் வினோத் ரோகில்லாவை பணி நீக்கம் செய்துள்ளனர். தற்போது அவர் மீது துறைரீதியிலான விசாரணைக்காக மாவட்ட கல்வி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த புகார் மீதான விசாரணை முடிவடையும் வரை அவர் இங்கு இருக்க பணிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மீது விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உள்ளனர் என்றார் அவர்.
பள்ளி ஆசிரியர்கள் மீது புகார் எழுவது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரே பாலியல் தொந்தரவு குற்றத்திற்கு ஆளாகி இருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.