ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு- தலைமையாசிரியர் கைது
கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் கல்னா என்ற இடத்தில் இருந்து பர்த்வான் நோக்கி ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மித்தாபுக்கூர் பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி நேற்று பிற்பகல் தனது தாயாருடன் பயணம் செய்தார்.
அருகருகே உட்கார சீட் கிடைக்காததால் அந்த மாணவி ஓரிடத்திலும், தாயார் மற்றொரு இடத்திலும் உட்கார்ந்து கொண்டனர்.
இந்நிலையில் அந்த சிறுமி அசந்து உறங்கி விட்டாள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ஆசாமி, அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உறக்கம் கலைந்து எழுந்த மாணவி, பயத்தில் அலறி கூச்சலிட்டாள். விபரமறிந்த சிறுமியின் தாயாரும், மற்ற பயணிகளும் அந்த கொடூரனுக்கு தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் பினாய் தாஸ் என்றும் மேமாரி பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பின்னர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். இதையடுத்து அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.