'திவயர்' மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமித்ஷா மகன் ஜெய்ஷா.. நீதிமன்ற விசாரணையின்போது எஸ்கேப்
அகமதாபாத்: தவறான கட்டுரை வெளியிட்டதாக 'திவயர்' இணையதளம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷா, கோர்ட்டுக்கே வராமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷா மகன் ஜெய்ஷா நிறுவனத்தின் வர்த்தகம் திடீரென பல மடங்கு உயர்ந்ததாக சில ஆதாரங்களுடன் 'திவயர்' என்ற ஆங்கில செய்தி வெப்சைட் சில வாரங்கள் முன்பு வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித்ஷாவுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர், விமர்சனங்களை முன் வைத்தனர்.
அவதூறு வழக்கு
இந்த நிலையில், தி வயர் இணையதளம் மீது அக்டோபபர் 9ம் தேதி அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஜெய்ஷா அவதூறு வழக்கு தொடர்ந்தார். 'திவயர்' இணையதள ஆசிரியர் மற்றும் நிருபருக்கு எதிராக அவர் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
கோர்ட்டுக்கு வரவில்லை
இந்த அவதூறு வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜெய்ஷா கோர்ட்டுக்கு வருவதை தவிர்த்துவிட்டார். புகார்தாரர் ஏன் கோர்ட்டுக்கு வரவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, சமூக நிகழ்ச்சிகளில் அவர் பிஸியாக இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஜெய்ஷா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதேநேரம், குற்றச்சாட்டுக்கு உள்ளான தரப்பில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
|
வராத ஜெய்ஷா
'திவயர்' வெப்சைட்டின் இணை நிறுவன எடிட்டர் எம்.கே.வேணு, வெளியிட்டுள்ள டிவிட்டில், "அவதூறு வழக்கின் முதல் நாள் விசாரணைக்கு புகார்தாரர் ஜெய்ஷா வரவில்லை. நீதிபதி ஏன் என்று கேட்டபோது, ஜெய்ஷா வழக்கறிஞர், அவர் சமூக பணிகளில் இருப்பதால் வர முடியவில்லை என தெரிவித்தார்" என்று கூறியுள்ளார்.
|
புகார்தாரர் ஓட்டம்
'திவயர்' வெப்சைட் எடிட்டர் சித்தார்த் வரதராஜன் வெளியிட்ட டிவிட்டில், "தி வயர் டீம் அகமதாபாத் கோர்ட்டுக்கு வெளியே நிற்கும் காட்சி. தனது பொய் அவதூறு வழக்கில் ஆஜராக, ஜெய்ஷா சோஷியல் வேலை என காரணம் காட்டி வரவில்லை. புகார்தாரர் பயந்து போய் முகத்தை காட்டாததையும், 'குற்றவாளிகள்' மகிழ்ச்சியாக கேமராவை பார்த்து சிரிப்பதையும் முதல் முறையாக பார்க்கிறேன்" என படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனிடையே வழக்கு விசாரணை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.