பத்திரிகையாளரை பலாத்காரம் செய்த வழக்கு- தருண் தேஜ்பால் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு!
பனாஜி: பலாத்கார வழக்கில் டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கோவா நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் கோவா போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன.
கோவா ஹோட்டல் ஒன்றில் சக பெண் பத்திரிகையாளருக்கு தருண் தேஜ்பால் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது புகார். இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரி தருண் தேஜ்பால் பனாஜி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் முதலில் பிற்பகல் 2.30 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இன்னும் சிறிது நேரத்தில் தேஜ்பால் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு!
இந்நிலையில் நேற்று மாலை கோவா சென்றடைந்தார் தருண் தேஜ்பால். பின்னர் அவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். அவருக்கு இன்று காலை 10 மணி வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து வழங்கியது பனாஜி நீதிமன்றம்.
அத்துடன் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று காலைக்கும் ஒத்திவைத்தது நீதிமன்றம், இதைத் தொடர்ந்து தற்போது முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது தருண் தேஜ்பாலும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார்.
14 நாள் கஸ்டடி கேட்ட போலீஸ்
இன்றைய விசாரணையின் போது, பலாத்கார வழக்கின் முழு விசாரணை முடிவடையும் வரை தருண் தேஜ்பால் கோவாவில் தங்கி போலீஸுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்று அவரது தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவா போலீஸ் தரப்பில், தருண் தேஜ்பாலை 14 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
பின்னர் இந்த விசாரணை மாலை 4.30மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலையில் தீர்ப்புக்காக அனைவரும் நீதிமன்றத்தில் கூடினர். தருண் தேஜ்பால் க்ரைம் பிரிவு போலீஸ் அலுவலகம் சென்றார்.
முன் ஜாமீன் மனு நிராகரிப்பு
இரவு 8 மணியளவில், தருண் தேஜ்பாலின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கோவா நீதிமன்ற தீர்ப்பால் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட தேஜ்பாலின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. கோவா போலீசார் எவ்வித சட்ட குறுக்கீடும் இல்லாமல் இனி தேஜ்பால் விவகாரத்தை கையாள்வர்.