இனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை!
இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
டெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் எழுதிய பேஸ்புக் பதிவு உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.
6-9-2018 இந்திய சட்டத்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க நாள். பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.
இந்த நிலையில்தான் மும்பையை சேர்ந்த ஓரின சேர்க்கையாளரான அர்னாப் நான்டி, தன்னுடைய ஓரின சேர்க்கை வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார். இந்த தீர்ப்பு தன்னுடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு வருடம் முன்
அர்னாப் நான்டி எழுதியிருக்கும் அந்த பேஸ்புக் பதிவில், இரண்டு வருடம் முன்பு வரை நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். கூண்டிற்குள் அடைப்பட்டு கிடந்ததை போல உணர்ந்தேன். எனக்கே என்னை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதன்பின்தான் நான் என்னையே உணர தொடங்கினேன். பொதுவில் சென்று என்னை போல இருக்கும் மனிதர்களை பார்த்தேன். 2 வருடத்திற்கு முன்பு வரை நான் கஷ்டத்தில்தான் இருந்தேன்.
தெரிவித்தேன்
அதன்பின் என் நண்பன் நிகிலின் பிறந்த நாளின் அன்றுதான் எனக்கு ''நான் ஒரு ஓரினசேர்க்கையாளன்'' என்று சொல்வதற்கு தைரியம் வந்தது. நான் என் நண்பர்கள் முன் அதை சொன்ன நிமிடம் எல்லாமும் மொத்தமாக மாறியது. நான் நினைக்காத அளவிற்கு என்னை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். என்னால் அவர்கள் அப்படி ஏற்றுக்கொண்டதை நம்பவே முடியவில்லை.
ஆனாலும் சந்தோசம்
ஆனாலும் எனக்கு தொடர்ந்து தற்கொலை எண்ணங்கள் இருந்தது. இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியவில்லை. அப்பாவும், அம்மாவும் மிகவும் பாரம்பரியமான சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். அவர்களிடம் இதை நான் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். என் குடும்ப சூழ்நிலை என்னை பெரிய அளவில் தடுத்தது.
வீட்டில் தெரிவித்தேன்
ஆனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டே என் வீட்டிலும் இதை சொன்னேன். ஆனால் என் பெற்றோர்கள் எனக்கு கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதைவிட எனக்கு வாழ்க்கையில் சந்தோசமான விஷயம் எதுவும் இருப்பதாக அப்போது தெரியவில்லை. ஆனாலும் சமுதாயத்தை நினைத்து எனக்கு அதன்பின்பும் பயம் இருந்தது. நான் குற்றவாளியா என்ற அச்சம் இருந்தது.
சந்தோசம்
ஆனால், இன்று (6ம் தேதி) அந்த தீர்ப்பு வந்து இருக்கிறது. நான் வீட்டிக்குள் நுழைந்ததும் என்னுடைய அப்பாவும், அம்மாவும் என்னை கட்டிபிடித்துக் கொண்டு கொண்டாடினார்கள். இனி என் மகன் குற்றவாளி கிடையாது என்று சந்தோசமாக கூறினார்கள். என்னை எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சந்தோசத்தில் கண்ணீர்விட்டு அழுதேன்.
திருமணம் செய்ய
ஆனால் அதற்கு பின் நடந்ததுதான் அதிசயம். என் அம்மா என்னைப்பார்த்து, இனி உனக்கு நாங்க பொண்ணு பார்க்க வேண்டியது இல்லை. பையன்தான் பார்க்கணும் என்று கூறினார். என் அம்மா என்னை இந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவர் எனக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். அவருக்கு ஓரினசேர்க்கை குறித்தும் எதுவும் தெரியாத போதும் கூட எனக்கு உறுதுணையாக இருந்தார்.
பேஸ்புக் பதிவு
அதன்பின் இந்த பேஸ்புக் பதிவை கூட அவர்தான் எழுத சொன்னார். இதோ உங்களிடம் நான் சந்தோசமாக தெரிவிக்கிறேன் நான் ஓர் ஓரின சேர்க்கையாளன்தான். என்னை போல யார் இருந்தாலும், உங்களுக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன்.. என்று சந்தோசமாக அந்த பேஸ்புக் பதிவை முடித்து இருக்கிறார். இந்த பதிவு இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.
ஒரு தீர்ப்பு
இந்த ஒரு தீர்ப்பு சில மக்களுக்கு கோபத்தை உண்டாக்கி இருந்தாலும் பலர் இதை வரவேற்று இருக்கிறார்கள். சோப் தொடங்கி ஏரோப்பிளேன் வரை எல்லா நிறுவனங்களும் தங்களது லோகோவை மாற்றி இதை கொண்டாடி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு இப்படித்தான் பலரது வாழ்க்கையை சந்தோசமாக மாற்றியுள்ளது.