கலாமின் மறைவை நினைத்து சாப்பிடாமல், தூங்காமல் இருந்த ஐஐஎம் ஷில்லாங் மாணவர்கள்
ஷில்லாங்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மயங்கி விழுந்து இறந்த இரவு ஐஐஎம் ஷில்லாங் மாணவர்கள் சாப்பிடாமல், தூங்காமல் கவலையில் இருந்துள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம்மில் கடந்த திங்கட்கிழமை மாலை மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார். மேடையில் பேசிக் கொண்டிருக்கையில் அவர் திடீர் என்று மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
செவ்வாய்க்கிழமை ஐஐஎம் ஷில்லாங் வளாகத்தில் மயான அமைதி நிலவியது. மாணவர்கள் முகத்தில் கவலை தெரிந்தது. யாரும், யாருடனும் பேசவில்லை. திங்கட்கிழமை இரவு மாணவர்கள் சாப்பிடவில்லை. கலாம் மரணத்தை நினைத்து அவர்கள் அன்று இரவு தூங்கவும் இல்லை.
கலாம் பற்றி ஒரு மாணவி தெரிவிக்கையில்,
அவர் அப்பொழுது தான் தனது உரையை துவங்கினார். இரண்டு வார்த்தை கூட பேசாத நிலையில் அவர் மயங்கி விழுந்தார். அவரது உரையை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை என்றார்.
கலாம் முன்னதாக இரண்டு முறை ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம்மிற்கு சென்றுள்ளார். கடைசியாக அவர் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி அங்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசினார்.