உன்னோடு நான் இறுதிவரை பயணிப்பேன்.. தெலுங்கானா அம்ருதாவிற்கு கவுசல்யா உருக்கமான கடிதம்!
ஆணவ கொலையால் கணவர் பிரணாய் குமாரை இழந்து இருக்கும் தெலுங்கானாவை சேர்ந்த அம்ருதவர்ஷினிக்கு ஆதரவாக உடுமலைபேட்டை கவுசல்யா கடிதம் எழுதியுள்ளார்.
ஹைதராபாத்: ஆணவ கொலையால் கணவர் பிரணாய் குமாரை இழந்து இருக்கும் தெலுங்கானாவை சேர்ந்த அம்ருதவர்ஷினிக்கு ஆதரவாக உடுமலைபேட்டை கவுசல்யா கடிதம் எழுதியுள்ளார்.
தெலுங்கானாவில் ஆணவ கொலையால் கணவர் பிரணாய் குமாரை இழந்து இருக்கும் அம்ருதவர்ஷினியை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கவுசல்யா.
தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமாரும், அம்ருதவர்ஷினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், பிரணாய் குமார் பட்டியலின சாதியை சேர்ந்தவர் என்பதால், ''ஓசி'' வகுப்பை சேர்ந்த அம்ருதவர்ஷினியின் தந்தை ஆள் வைத்து பிரணாய் குமாரை கொலை செய்தார்.
உடுமலை பேட்டை கவுசல்யாவின் கணவர் சங்கரும் இதேபோல்தான் 2016ல் கொல்லப்பட்டார். இதனால் அம்ருதாவிற்கு ஆதரவாக கவுசல்யா களமிறங்கி உள்ளார். இந்த நிலையில் அம்ருதாவிற்கு கவுசல்யா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதற்கு முன்பே
தமிழகத்தில் கவுசல்யாவின் கணவர் சங்கர் உடுமலைபேட்டையில் கொலை செய்யப்பட்டதை போலவே இந்த கொலையும் நடந்து இருக்கிறது. மார்ச் 13, 2016ல் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். நடுசாலையில் மக்கள் முன்னிலையில் இவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டு ஆட்கள் மூலம் இந்த கொலை அரங்கேற்றப்பட்டது.
தோழர் அம்ருதா
தோழர் அம்ருதாவிற்கு! என்று தொடங்கும் அந்த கடிதத்தில், நாம் கொண்ட காதலுக்கு உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பதற்கே கூட இந்தச் சாதியச் சமூகம் இரக்கமின்றித் தடை போடுகிறது. காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற அன்பும் நம்பிக்கையும் சார்ந்த நமது உள்ளுணர்வை பெற்றோரால் புரிந்துகொள்ளவே முடியாது அமிர்தா! ஏனென்றால் நம் மீது கொண்ட அன்பைவிட அவர்களுக்கு சாதி ஆணவம் பெரிது. பிரனாய் உன் வாழ்வில் கிடைத்த மற்றொரு தாயாகவே இருந்திருப்பான் என்பது எனக்கு நன்கு புரியும். இன்று நீ காட்டும் உறுதி அதை மெய்ப்பித்துக் கொண்டுள்ளது.
சாதி வெறி
உனக்கு ஒரு குழப்பம் இருந்திருக்கும். ஏன் நம் பிரனாயை இவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று! பாவம் பெற்றோரின் சாதி வெறி உன்னையே புரிந்து கொள்ள விடவில்லை பிறகு எப்படி பிரனாயை புரிந்து கொள்ளச் செய்யும். நம் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்த பெற்றோர் இதை செய்வார்கள் என்று நினைத்திருக்க மாட்டாய் . சாதி வெறிக்கு முன்னால் அன்பு தோற்றுப் போகும்.
சாதிவெறிக்கு சவுக்கடி
பிரனாயின் காதலும் தாய்மையும் உன்னை எழுந்து வீறு நடை போடச் செய்யும் என்று நான் அறிவேன். பிரனாயின் குழந்தை கருவில் வளர விடக்கூடாது என்பவர்களை எதிர்த்து நிற்கிறாய். அவர்களின் சாதி வெறிக்கு நீ கொடுத்த சவுக்கடி இது. அதோடு இன்று உன் வலியைத் தம் வலியாகப் பார்க்கும் இதயங்கள் உன்னைச் சூழ்ந்திருக்கும். இனிதான் நீ நிறைய சமூக உறவுகளைப் பெறுவாய். நீ தனித்து விடப்படவில்லை. பிரனாய் உனக்கு குழந்தையை மட்டுமல்ல புதிய உலகத்தைப் பரிசாகத் தந்து போயிருக்கிறார்.
நீயும் நானும் ஒன்றுதான்
பிரனாயை விட்டு நீ எப்படி இருக்கிறாயோ அப்படித்தான் நானும் நின்றேன். வாழ்வே இருண்டது போல் இருந்தது. ஒருநாள் கூட அவனைப் பிரிந்து இருக்கத் துணியாதவள்தான் இன்று இரண்டரை வருடங்களுக்கு மேல் பிரிந்து கிடக்கிறேன். பிரனாய்க்கான நீதியாக கொலைக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். ஆனால் அதோடு இந்த நீதிப் போராட்டம் நின்றுவிடுவதல்ல. சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைக்கச் செய்ய வேண்டும். நம் வாழ்நாள் முழுவதும் சாதியை ஒழித்துக்கட்ட சமூகப் போராளியாக காலமெல்லாம் பங்களிக்க வேண்டும். இவைதான் அவருக்குச் செய்யும் வாழ்நாள் நீதியாக இருக்கும்.
உன்னுடன் இறுதிவரை பயணிப்பேன்
தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்கும் பணியில் இருக்கிற நாங்கள் ஒவ்வொருவரும் உன்னை எங்கள் பிள்ளை போல் கருதுகிறோம். இங்குள்ள சாதி ஒழிப்பு ஆற்றல்கள் உன்னோடு தோழமை கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை என் வழியாக உனக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைக்க உன்னோடு நான் கைகோர்த்து இறுதிவரை பயணிப்பேன் என்ற உறுதியைத் தந்து விடைபெறுகிறேன், என்று தனது கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.