கொதிக்கும் ”அக்னி” – டெல்லியையும் விட்டு வைக்காமல் சக்கை போடு போடும் வெயில்
டெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும், மற்ற இடங்களிலும் அக்னி வெயில் சக்கைப் போடு போட்டு வருகின்றது. நேற்று மட்டும் டெல்லியில் 45.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
இந்த வெயில் இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக இந்தியா முழுவதும் அக்னி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காலை 9 மணிக்கு வேகம் எடுக்கத் தொடங்கும் வெயில் பிற்பகல் 4.30 மணி வரை கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக 11 மணி முதல் 3 மணி வரை அடிக்கும் அனல் காற்று மக்களை கடும் அவதிக்குள்ளாக்குகிறது. இந்த அனல் காற்று உடலில் நீர் இருப்பை குறைத்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய தாக்கம் இந்தியா முழுக்க காணப்படுகிறது.
கோடை வெயிலுக்கு இது வரை நாடு முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்களில் கோடை வெயிலின் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.