121 டிகிரி பாரன்ஹீட்.. தீப்பிடித்தது போல் காட்சியளிக்கும் பிலாஸ்பூர்!
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் 121 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதால் தீப்பிடித்து எரிவதை போல் காட்சியளித்தது.
வடமாநிலங்களில் பல்வேறு நகரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. தென் மாநிலங்களிலும் இதே நிலை நீடித்து வருவதால் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம், பிளாஸ்பூரில் 121 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி வருகிறது. இது மாநிலத்தில் முதல்முறையாக இத்தகைய வெப்பம் பதிவாகியுள்ளது. ஓடிஸா மாநிலம் தித்லா நகரில் 117 டிகிரி பாரன்ஹீட்டும், மகாராஷ்டிரத்தின் சந்திப்பூரில் 116, பிரம்மபுரியில் 114 வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நாக்பூர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாண்டா, தெலுங்கானாவின் ராமகுண்டம் ஆகிய இடங்களில் 113 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனால் மக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடங்கின்றனர். இந்த வெயிலால் காட்டு பகுதிகளில் உள்ள வன விலங்குகள் ஊருக்குள் வரும் என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.