ஜம்மு - காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை.. பாதுகாப்பு படை அதிரடியில் 4 தீவிரவாதிகள் பலி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் அதிரடி தாக்குதலில், இதுவரை 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் தாரம்தோரா கேகம் பகுதியில் அதிகாலை முதலே பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம், கேகம் என்னும் இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து 33-வது ராஷ்டீரிய ரைபிள் படைப்பிரிவினருடன் இணைந்து, ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் சிறப்பு அதிரடிப் படையினர் அப்பகுதியை இன்று அதிகாலை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் தங்களை தேடுவதை அறிந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் இதனையடுத்து உஷாரான படை வீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் சரணடைந்து விடுமாறு எச்சரித்தனர்.
ஆனால் எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட துவங்கினர். இதனால் பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் தற்போது வரை 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் படையினர் தொடர்ந்து ஈடுட்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
முன்னதாக கடந்த புதன்கிழமை ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நிகழ்த்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகளை அம்மாநில காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.