சாணியைப் போட்டு நல்லா மெழுகி.. அகமதாபாத்திலும் உண்டு செல்லூர் ராஜூ டைப் சிந்தனையாளர்கள்!
அகமதாபாத்: அகமதாபாத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதால் கார் மீது மாட்டுச் சாணத்தை பூசியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. கோடையை சமாளிக்க மக்கள் மோர் குடிப்பது, ஜில்லென்று ஜூஸ், குளிர்ந்த நீர் ஆகியவற்றை குடித்து சூட்டை தணித்து கொள்கின்றனர்.
மாட்டுச் சாணம்
அகமதாபாத்தில் உள்ள ஒரு பகுதியில் குளிர்ச்சியாக பயணம் செய்ய புதிய யுத்தி ஒன்றை ஒரு பெண் கண்டறிந்துள்ளார். இதற்காக மாட்டு சாணத்தை எடுத்து கார் முழுவதும் பூசிவிட்டுள்ளார்.
இந்தியாவில்
இதை பார்க்கும் அனைவரும் மாட்டுச் சாணத்தை இது போன்று பயன்படுத்தியதை இதுவரை பார்த்ததில்லை என கூறினர். கோடைக்காலத்தில் வெயிலை சமாளிப்பதற்காக வீட்டுச் சுவர்களில் சாணத்தை பூசுவது இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் ஒன்று.
கதகதப்பாக இருக்கும்
மாட்டு சாணமும், கோமியமும் ஒரு கிருமிநாசினியாகும். இந்த மாட்டு சாணத்தை பயன்படுத்தினால் அந்த இடமே குளிர்ச்சியாக இருக்கும் என எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்காக காரில் பூசுவதா என்ற கேள்வியும் எழுகிறது.
அகமதாபாத்திலும் உண்டு
நீர் ஆவியாவதை தடுக்க வைகை ஆற்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மாகோல் ஷீட்டுகளை ஆற்றில் மிதக்க வைத்தார். அது போல் குளிர்ச்சிக்காக காரில் மாட்டுச் சாணத்தை மெழுகியதை பார்க்கும் போது அகமதாபாத்திலும் ஒரு செல்லூர் ராஜூ டைப் சிந்தனையாளர்கள் உண்டு போல்!