கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை.. 2 மாவட்டங்களில் வெள்ளம்.. பீதியில் மக்கள்!
கேரளா, கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது.
கிருஷ்ணா: கேரளா, கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. இதனால் கேரள மாநிலம் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது. .
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்திலும் உள்ளது.
கேரளாவில் ஓய்ந்தது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துள்ளது. அங்கு வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.
ஆந்திராவில் கனமழை
இந்நிலையில் ஆந்திராவில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. ஆந்திராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கிருஷ்ணாவில் வெள்ளப்பெருக்கு
இதனால் கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாற்றில் வெள்ளம்
இதேபோல் கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் 60 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிராமங்கள் துண்டிப்பு
வெள்ளத்தால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஏராளமான கிராமங்கள் சாலை போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டுள்ளன.
மக்கள் அச்சம்
பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விளை நிலங்கள் நீரில் முழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கேரளாவைப் போல் ஆந்திராவையும் இந்த மழை புரட்டி போட்டுவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.