வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை.... இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது!
மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போயுள்ளது.
மும்பையில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. மும்பை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வந்தன.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இடை இடையே மழையின் தீவிரம் குறைந்து தூறல் போட்டது. ஆனாலும் மழை விட்டபாடில்லை.
வெள்ளக்காடு...
இதனால் மும்பை நகரை மழை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.
வாகன நெரிசல்
கிழக்கு மற்றும் மேற்கு விரைவு சாலையிலும் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. மேற்கு விரைவு சாலையில் வாகனங்கள் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
விமான சேவை பாதிப்பு
மும்பையில் பெய்த பலத்த மழைக்கு விமானமும் தப்பவில்லை. உள்நாட்டு, பன்னாட்டு விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஒரே நாளில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் நேற்று மும்பையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.