மும்பையில் கனமழை.. ரயில்கள் நிறுத்தம்.. பள்ளிகள் விடுமுறை.. மீட்பு பணியில் கடற்படை
மும்பையில் பெய்துவரும் கனமழையால் சில ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் பெய்துவரும் தொடர்மழையால், மும்பையில் ரயில்கள் இயக்கப்படுவது சிக்கலாகியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்துவருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் ரயில்களைத் தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சில ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன சில ரயில்கள் 10 - 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
மேலும், மழை காரணமாக மும்பையின் அண்டை மாவட்டங்களான தானே, பால்கர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையம் மும்பையில் மேலும் மழை பெய்யும் என்று அறிவித்ததால் டப்பாவாலாக்கள் இன்று அலுவலகங்களுக்கு உணவு கொண்டு செல்லும் வேலையை செய்யவில்லை. மேலும், வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என்று கணித்துள்ளது.
கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களைப் மீட்க தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை மையம், கடற்படை விரைந்து செயல்படும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை அருகே உள்ள வாசை - விரார் இடையே ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கியிருப்பதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகள் அதிகம் பணம் செய்யும் தெற்கு மும்பையின் சர்ச்கேட் ரயில் நிலையத்துக்கும் விராருக்கும் இடையே ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சர்ச்கேட்டுக்கும் போரிவில்லிக்கும் இடையே வழக்கம்போல இயக்கப்படுகிறது என்று ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ரயில்வே வெளியிட்ட ஒரு போட்டோவில் மும்பைக்கு வெளியே நல்லசோபுராவில் ரயில் தண்டவாளங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருப்பது தெரியவந்துள்ளது. இங்கே 460 மி.மீ. ரயில் தண்டவாளங்கள் மூழ்கியிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நல்லாசோபுரா ரயில் நிலையத்தில் மும்பை - அஹமதாபாத் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பையின் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் கால்வாய் பள்ளங்கள் திறந்து கிடக்கின்றன. அதனால், சாலையில் பைக்கில் பயணம் செய்வது ஆபத்தானது என்று எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை மொத்தமாக 144.47 மி.மீ. மழை பொழிவைப் பெற்றுள்ளது. இதில் மும்பை கிழக்கு புறநகர்ப் பகுதியில் 107.21 மி.மீ. மழையும், மும்பை மேற்கு புறநகர் பகுதியில் 131.32 மி.மீ. மழையும் பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக பல பள்ளிகள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.