சபரிமலையில் கனமழை: பம்பை ஆற்றில் குளிக்க, மலையேற பக்தர்களுக்கு தடை
திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், மலையேறவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் கன மழை பெய்து வருகிறது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று மாலை முதல் சபரிமலையில் விடாமல் மழை பெய்து வருகிறது. மாலை 3 மணி அளவில் மழை தீவிரம் அடைந்ததால் பம்பையில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது. இதே போல் சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் கீழே வரவும் அனுமதிக்கப்படவில்லை.
பம்பையில் வெள்ளம்
தொடர் மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பம்பை மணல் புரத்தில் பம்பை ஆற்று நீர் கரையை தாண்டி பாய்ந்ததால் அங்குள்ள பக்தர்கள் தங்கும் மண்டபமான ராமமூர்த்தி மண்டத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆற்றில் புனித நீராட பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை
பக்தர்கள் தவிப்பு
சபரிமலையில் உள்ள கக்கியாற்றிலும் அதிக அளவில் வெள்ளம் ஓடுகிறது. சபரிமலை சன்னிதானத்திலும் மழை நீர் தேங்கி உள்ளது. கூனார் மலைபகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசாருக்கு உணவு கொண்டுச் சென்ற ஒருவரை மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் சிரமம்
பம்பை அருகே திரிவேணி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லாமல் இருக்க வடங்களை கட்டினர். வெள்ளப்பெருக்கை அடுத்து சன்னிதானத்தில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் அதிவேக அதிரடி படையினர் பம்பைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐயப்ப பக்தர்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் விடுமுறை
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.