சென்னையை விட மகா மோசமான நிலையில் மும்பை.. பேய் மழை.. பெருவெள்ளம்.. எல்லாம் ஸ்தம்பிப்பு! #MumbaiRains
மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமெங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலை, ரயில் போக்குவரத்து பாதித்துள்ளது.
மும்பை: மும்பையில் பெய்து வரும் தொடர்மழையால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்துள்ளது. சாலை போக்குவரத்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் ஏரிகளும் நிரம்பி வருகின்றன.
பருவமழை தீவிரமடைவதால் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
|
வெள்ளநீர் தேக்கம்
மும்பை பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மழை காரணமாக ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
|
விளையாடும் குழந்தைகள்
இடுப்பளவு தேங்கி நிற்கும் வெள்ள நீரில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர். ஆனால் வாகன ஓட்டிகள்தான் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இருசக்கரம், கார்களில் சென்றவர்கள் நகரமுடியாமல் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
|
3 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் நிம்போடி கிராமத்தை சேர்ந்த அகமது நகரில் கனமழைக்கு சேதமடைந்த பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
|
மழை நீடிக்கும்
மும்பையின் சில பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
|
பிளக்ஸ் பேனர்கள் விழுந்து விபத்து
கனமழை காரணமாக மும்பையின் விபி சாலை பகுதியில் உள்ள இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட சுவரொட்டிகள் 4 பேர் மீது விழுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள சாஃபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.