3வது நாளாக மும்பையில் கனமழை.. ரயில் சேவைகள் பாதிப்பு.. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்
மும்பையில் பெய்துவரும் கனமழையால் ரயில்கள் இயக்கப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
மும்பை: மும்பையில் 3வது நாளாக தொடர்ந்து, பெய்துவரும் கனமழையால் ரயில்கள் இயக்கப்படுவதில் தடை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பையின் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். நல்லாசோபாரா ரயில் நிலையத்தில் 460 மி.மீ. அளவு உயரத்துக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
மும்பையில் இருந்து இயக்கப்படும் கர்னாவாடி எக்ஸ்பிரஸ் ரயில், டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மும்பை சென்ட்ரல் கோட்ட மேலாளர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை தெற்கு மும்பை, பயந்தர், சர்ச்கேட் இடையே மிதமான வேகத்தில் உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டன.
மும்பை நல்லாசோபாரா வாசை ரயில் நிலையங்களில் 1500 பயணிகளுக்கு மேல் சிக்கினர். அவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அவர்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
மும்பை செம்பூர் போஸ்டல் காலனியில் 72 மணி நேரமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளநீரால் அங்குள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், வெள்ளநீர் அவர்களுடைய வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மும்பை வானிலை ஆய்வு மையம் நாளை வியாழக்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என்று கணித்துள்ளது. இதனால், மேலும் நிலைமை சிக்கலாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.