கேதார்நாத்துக்கு மீண்டும் சோதனை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பாலம் - பக்தர்கள் தத்தளிப்பு!!
டேராடூன்: இமயமலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் புனிதத் தலமான கேதார்நாத்தை இணைக்கும் மிக முக்கியமான பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பக்தர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்மழையால் இமயமலையில் மந்தாகினி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இந்த வெள்ளத்தால் கேதார்நாத் புனித தலத்துக்கு செல்லக் கூடிய ரூத்பிரயாக் மாவட்டத்தில் சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையேயான முக்கிய பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இருப்பினும் இதில் பக்தர்கள் எவரும் சிக்கவில்லை.
இதனிடையே தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் கேதார்நாத் நடுவழியில் சிக்கிக் கொள்ளும் பக்தர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு இதேபோல் கொட்டித் தீர்த்த கனமழை, பனிச்சிகரம் உடைந்தததால் ஒட்டுமொத்த கேதார்நாத் புனித தலமே நிர்மூலமானது. பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.