அஸ்ஸாம், பீகார், கர்நாடகத்தில் தொடர் கனமழை.. டெல்லி-குர்கான் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லி: பீகார், டெல்லி, அஸ்ஸாம், கர்நாடகா, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக டெல்லி - குர்கான் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. பீகார், டெல்லி, அஸ்ஸாம், கர்நாடகா, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விடாமல் கொட்டி வரும் கனமழையால் டெல்லி சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஹரியானா மாநிலத்தின் குர்கான் நகரின் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெல்லியிலிருந்து ஹரியானா செல்ல குர்கான் நெடுஞ்சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும். நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இருசக்கர வாகனங்கள், கார்கள் வெள்ள நீரில் சிக்கின. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதையடுத்து நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனிடையே அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகளை சீர்படுத்த சிறப்பு குழுக்களை அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உத்தரவிட்டுள்ளார். கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, ஹரியானா முதல்வர் கட்டார் தன்னுடைய பயண திட்டங்களை ஒத்தி வைத்தார். மழையின் காரணமாக டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் சுமார் 20 கிலேமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.