ஓகி புயலால் சென்னை, லட்சதீவில் பலத்த காற்று வீசும்.. மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம்!
ஓகி புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் லட்சத்தீவில் பலத்த மற்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை அமையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஓகி புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் லட்சத்தீவில் பலத்த மற்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை அமையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஓகி என வங்கதேசம் பெயரிட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. பலத்த மழையும் பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
80 கி.மீ தொலைவில் ஓகி
காலையில் கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த புயல் பிற்பகலுக்குப் பிறகு கன்னியாகுமரியை விட்டு விலகத் தொடங்கியுள்ளது. தற்போது கன்னியாகுமரியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
லட்சத்தீவுக்கு எச்சரிக்கை
ஓகி புயல் லட்சதீவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் லட்சத்தீவுக்கு இந்திய வானிலை மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
48 மணிநேரத்திற்கு கனமழை
ஓகி புயலால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலும் காற்று வீசும்
ஓகி புயலின் தாக்கத்தால் சென்னையிலும் காற்று வீசும் என்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சதீவு மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.