சபரிமலை: மகரஜோதியைக் காண தங்கும் பக்தர்களால் நெருக்கடி
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்தில் பங்கேற்கவும், பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதியை தரிசிக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரசங்கராந்தி தினத்தன்று மகர விளக்கு பூஜை நடைபெறும். பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் கிடைக்கும். இதனையொட்டி கடந்த 30ம் தேதி நடை மீண்டும் திறக்கப்பட்டது.
பக்தர்கள் வசதிக்காக குண்டாறு அணையில் இருந்து பம்பை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பலரும் அரவணை, அப்பம் ஆகியவற்றை கூடுதலாக வாங்குவதால் சபரிமலையில் இவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மரக்கூட்டம் வரை பக்தர்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது. அவர்களை போலீசார் ஒழுங்குப்படுத்தி அனுப்பி வருகிறார்கள்.
வாகனங்களும் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதை ஒழுங்குப்படுத்தவும், போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பெருவழி பாதை வழியாக சரண கோஷம் எழுப்பி நடந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானம் சென்று 18-ம் படி ஏறி ஐய்யப்பனை தரிசித்து விட்டு மகர ஜோதியை காண பொன்னம்பலமேடு, புல்மேடு பகுதிகளிலேயே தங்கி விடுகின்றனர்.
மகரஜோதி தரிசனம் முடியும் வரை சன்னிதானத்திலும், புல்மேடு, பொன்னம்பல மேடு பகுதிகளிலும் சரணகோஷத்திற்கு குறை இருக்காது. அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், வன விலங்குகள் ஆபத்து வராமல் தடுக்கவும், வன ஊழியர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும் சபரிமலையிலேயே முகாமிட்டுள்ளனர்.]