சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 13 மணிநேரம் காத்திருப்பு - நெரிசலில் சிக்கிய பக்தர்கள் காயம்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஐயப்பனை தரிசிக்க பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் நெரிசலில் சிக்கிய பல பக்தர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தன.
கேரளமாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் பக்தத்கள் சென்று வந்தாலும், கார்த்திகை மாதம் தொடங்கும் மண்டல பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வாடிக்கை. இந்த ஆண்டு மண்டல பூஜைக்காலம் நவம்பர் 17ம் தேதி தொடங்கியது. கடும் மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. தற்போது மழை குறையவே, கடந்த 21ம் தேதி முதல் மீண்டும் கூட்டம் அதிகரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 27 ம்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று இரவு நடை அடைக்கப்பட்ட பின் டிசம்பர் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு மகரவிளக்கு கால பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும்.
மண்டல பூஜை
மண்டல பூஜை காலம் முடிய நான்கு நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.மழையால் சபரிமலை பயணத்தை தள்ளிபோட்ட தமிழக பக்தர்கள், தற்போது அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு, அரசு தொடர் விடுமுறையால் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் அதிகரித்து வருகிறது.
பல மணி நேரம் காத்திருப்பு
இதனால் சரங்குத்தியில் இருந்து வரிசை தொடங்குகிறது. சரங்குத்தியில் அதிகாலை 4 மணிக்கு வரும் பக்தர்கள், மாலை 4 மணிக்குதான் 18ம் படியேறி சுவாமியை தரிசனம் செய்ய முடிகிறது. பல மணி நேரங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். நேற்று காலை பொறுமை இழந்த பக்தர்கள் போலீசின் தடுப்புகளை உடைத்து சன்னிதானம் நோக்கி முன்னேற முயன்ற போது நெரிசல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டவர்கள், சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் மூச்சுத்திணறல்
சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கால் முறிவு, மாரடைப்பு ஏற்பட்ட மூன்று பேர் கோட்டயம் மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பப்பட்டனர். பம்பையில் குளித்து தயாராகும் பக்தர்கள், இரண்டு மணி நேரம் வரை கம்பி வேலிக்குள் நின்ற பின்தான் மலையேறி செல்ல முடிகிறது.
வாகனங்கள் நிறுத்தம்
நிலக்கல்லில் தனியார் வாகனங்கள் தடுக்கப்படுகின்றன. இங்கு பக்தர்களை இறக்கி விட்டு, கேரள அரசு பஸ்சில் செல்ல வலியுறுத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். வரும் நாட்களிலும் நிலைமை இதே போல்தான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர விளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 27 ம்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று இரவு நடை அடைக்கப்பட்ட பின் டிசம்பர் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு மகரவிளக்கு கால பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும்.