பெங்களூரு திருவள்ளுவர் சிலையைப் பாதுகாக்கும் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் #bengaluru
பெங்களூரு: பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும், அதே பகுதியில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்க கட்டடத்திற்கும் மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் சிலை உள்ள பூங்காவிலும், தமிழ்ச் சங்க கட்டடம் அருகிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதரடிப்படை கவச வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக நேற்று வெடித்த மிகப் பெரிய வன்முறையால் பெங்களூரே போர்க்களமானது. கன்னட அமைப்பினர் தமிழகத்தை சேர்ந்த பஸ், லாரி, கார்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் பெங்களூருவில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அல்சூரில் திருவள்ளுர் சிலை அமைந்துள்ள பூங்காவை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் அதே பகுதியில் உள்ள தமிழ்ச் சங்க கட்டிடத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாதபடி பெங்களூரு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.