கடும் மூடுபனி... டெல்லியில் ரெயில், விமான சேவைகள் பாதிப்பு
டெல்லி: கடும் மூடுபனி காரணமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளில் ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இன மொழி மதம் கொண்ட மக்களைப் போலவே, பல்வேறு பருவ நிலையைக் கொண்ட நாடு இந்தியா. தெற்கில் வெயில் வாட்டி வதைத்தால், வடக்கில் கடும் குளிரும் பனியும் பொழியும். கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் வேறுபட்ட கால நிலை நிலவும்.
இப்போது தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. அடர்ந்த பனிமூட்டம் வெகுநேரம் நீடிப்பதால் காலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் உள்ளதால் ஓட்டுநர்கள் திணறுகின்றனர். இந்த கடும் பனிமூட்டம் காரணமாக ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்படுகிறது.
டெல்லியில் இன்று வெப்பநிலை 8.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்ததால் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு குளிர் வாட்டியது. இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியசாக இருக்கும் எனவும், நாள் முழுவதும் பரவலாக மேகமூட்டம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நேற்று அதிகபட்சம் 18.5 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 10.5 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
16 ரெயில்கள், 12 விமானங்கள் லேட்
இந்த பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களுக்கு செல்லும் 69 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. 16 ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டெல்லியிருந்து 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.