குழாய்களில் உறைந்த தண்ணீர்.. பனியால் போர்த்தப்பட்ட சிம்லா... முடங்கிய இயல்பு வாழ்க்கை
சிம்லா, மணாலி போன்ற குளிர் பிரதேசங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பல அடிப்படை தேவைகளின் பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிம்லா: சிம்லாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளின் பாதிப்பால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
தற்போதைய சிம்லா மாவட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காளி தேவியின் மற்றொரு பெயரான 'சியாமளா' என்ற பெயரில் இருந்து சிம்லா என்ற பெயர் உருவானது.
தற்போது காஷ்மீர், சிம்லா, மணாலி போன்ற குளிர் பிரதேசங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பல அடிப்படை தேவைகளின் பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பனிச்சரிவு ஏற்படும் - எச்சரிக்கை
சிம்லா மற்றும் பண்டாரில் வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸாக உள்ளது. கடும் பனிப்பொழிவால் உயரமான மலைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் பனிச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலை தூர பகுதிகளுக்கு செல்லாதீர்
சிம்லா மட்டுமின்றி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா, பாலம்ப்பூர், சோளன், உன்னா உள்ளிட்ட பகுதிகளிலும் குளிர் அதிகரித்துள்ளது. இதனால் பனிப்பொழிவு அதிகமுள்ள தொலைதூர பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
துண்டிக்கப்பட்ட சிம்லா
அடர்ந்த பனிப்பொழிவால் சாலை போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் மற்ற பகுதிகளில் இருந்து சிம்லா, மணாலி உள்ளிட்ட பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக சிம்லாவில் குவிந்த சுற்றுலா பயணிகளும் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
குழாய்களில் உறைந்த தண்ணீர்
சிம்லாவில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களின் விநியோகமும் தடை பட்டுள்ளது. கடும் குளிரின் விளைவாக தண்ணீர் உறைந்து குழாய்களில் தண்ணீர் விநியோகம் இன்றி காணப்படுகிறது.
வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்
அதிகபட்சமாக சவுர்தார் என்ற இடத்தில் 90 செ.மீ பனிப்பொழிவு பதிவுாகியுள்ளது. சுற்றுலா பயணிகளும், உள்ளூர்வாசிகளும் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியே வர வேண்டாம் என சிம்லா மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.