ஜில்லோ ஜில்லு... நம்புங்க.. சத்தியமா இது நம்ம மூணாறுதான்.. எங்கு பார்த்தாலும் உறை பனி!
மூணாறில் கடுமையான உறைபனி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மூணாறு: கைகளால் ஐஸ் கட்டியை அள்ளி எடுக்கவும், உறைபனியால் மூழ்கி கிடக்கும் ஊரை பார்க்கவும் மக்கள் மூணாறில் குவிந்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் தற்போது குளிர் வாட்டி வருகிறது. இதில் மலைவாசஸ்தலங்கள் கேட்கவே வேண்டாம். எல்லா ஊர்களும் மைனஸ் டிகிரியில் போய் கொண்டிருக்கிறது.
இந்த குளிருக்கு பயந்து ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதே இல்லை என்றால், மூணாறில் தலைகீழ் நிலைமை.
பனிக்கட்டிகள்
வெள்ளைக்கம்பளம் விரித்தது போன்று கொட்டிக் கிடக்கும் பனியை ரசிக்க மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 லட்சம் பேர் இந்த உறைபனியை பார்க்க கிளம்பி வந்துள்ளனர். தேனி மாவட்டத்துக்கு பக்கம் என்பதால், தமிழகம், கேரளா என இரு மாநில மக்களும் அங்கு செல்வது இயல்பாகி விட்டது.
ஒயிட் அண்ட் ஒயிட்
கன்னிமலை, பெரியவாரை, லட்சுமி, சிட்டிவரை, சைலன்ட்வாலி, மாட்டுப்பட்டி, குண்டளை, சிவன்மலை போன்ற எஸ்டேட் பகுதிகளில் தரைப்பகுதி, விவசாய பகுதி என எல்லாமே வெள்ளை பனியால் காட்சி தருகிறது. இந்த "ஒயிட் அண்ட் ஒயிட்" அழகில் மயங்கி போய் மக்கள் வளைத்து வளைத்து வீடியோ, போட்டோக்களை எடுத்து தள்ளுகிறார்கள்.
கருகிய செடிகள்
ஆனால் உறைபனியால் தேயிலை, காய்கறி தோட்ட தொழிலாளர்கள்தான் பெருத்த கவலையில் உள்ளனர். எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலை செடிகள் எல்லாம் கருகிவிட்டன. இவையெல்லாம் பழைய நிலைக்கு திரும்பி வர மாசக்கணக்காகும்.
ஏலக்காய் செடிகள்
இதில் ரொம்பவும் பரிதாபமான நிலைமை ஏலக்காய் செடி பயிரிடப்பட்டவர்களுக்குதான். இயல்பு வாழ்க்கை கெட்டுள்ளதுடன், தொழிலும் முடங்கி போய் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.