'சில்லி' விஷயங்களில் கவனம் வைக்காதீர்கள்.. மதுரா கலவரம் தொடர்பாக மீடியாக்களிடம் சீறிய ஹேமமாலினி
மதுரா: நான் மதுரா மக்களுக்கு என்ன பணி செய்துள்ளேன் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும், மீடியாக்காரர்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை என்று நடிகையும், அத்தொகுதி எம்.பியுமான ஹேமமாலினி சீற்றமாக தெரிவித்தார்.
மதுராவில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் நடுவே நடைபெற்ற மோதலில், ஒரு எஸ்.பி உட்பட 24 பேர் கொல்லப்பட்ட நிலையில், மும்பையில் சினிமா சூட்டிங்கில் ஹேமமாலினி பிசியாக இருந்தார். இந்த ஸ்டில்களை டிவிட்டரிலும் அவர் பகிர்ந்திருந்தார்.
மீடியாக்களும், சோஷியல் மீடியாவும் கொந்தளித்ததை தொடர்ந்து, ஹேமமாலினி அந்த டிவிட்டுகளை டெலிட் செய்தார். இந்நிலையில், மதுரா விரைந்த அவரிடம் நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். கோபமாக பதிலளித்த ஹேமமாலினி கூறியதாவது:
சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் நான் மதுராவுக்கு வந்துவிட்டேன். இன்னும் முதலமைச்சர் இங்கு வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாநில அரசைத்தானே தவிர, எம்.பியாகிய என்னை கிடையாது.
ஒரு எம்.பிக்கு வேறு பணிகள் இருக்க கூடாதா? நானும் சூட்டிங் பணியில் இருந்தேன். அதில் தவறு கிடையாது. மதுரா கலவரம் பற்றிய தகவல் வந்ததும் சூட்டிங்கை நிறுத்திவிட்டு வந்துள்ளேன்.
நான் மதுராவுக்கு என்ன நலப் பணிகள் செய்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும். அதை உங்களுக்கு (மீடியா) சொல்ல வேண்டிய தேவையில்லை. என்னை எதற்கு சுற்றி வருகிறீர்கள்? 'சில்லி' விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உண்மையான பிரச்சினையான சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் உங்கள் கவனத்தை வையுங்கள். இவ்வாறு ஹேமமாலினி தெரிவித்தார்.