பதவி ஏற்றதும் ஹேமந்த் சோரன் அதிரடி- பல்லாயிரம் பழங்குடியினர் மீதான போராட்ட வழக்குகள் ரத்து!
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரன், முந்தைய பாஜக அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி, டி. ராஜா, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதனையடுத்து முதல்வர் அலுவலகத்தில் தமது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் ஹேமந்த் சோரன்.
முதல்வராக பணியை தொடங்கிய உடனேயே, முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக பாதல்காடி இயக்கம் போராட்டம் நடத்திய போது பல்லாயிரக்கணக்கான பழங்குடிகள் மீது போடப்பட்ட வழக்குகளை அதிரடியாக ரத்து செய்தார். மேலும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இது தொடர்பான வழக்குகளை விரைந்து முடிவுக்கவும் ஹேமந்த் உத்தரவிட்டுள்ளார்.
நீங்க அரசியல்வாதி இல்லை.. உங்க வேலையை மட்டும் பாருங்க.. ராணுவ தளபதிக்கு ப.சிதம்பரம் பதிலடி!
ஜார்க்கண்ட்டில் பாஜக, ஆட்சியை பறிகொடுக்க இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டம் முக்கிய காரணம். இச்சட்டமானது பழங்குடியினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.