குடியுரிமையை நிரூபிக்கவும் கியூவில் நிற்க வேண்டுமா? பாஜக மீது ஹேமந்த் சோரன் பாய்ச்சல்
ராஞ்சி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போல தற்போது குடியுரிமையை நிரூபிக்கவும் பொதுமக்களை வரிசையில் நிற்க வைக்க பாஜக முயற்சிக்கிறது என ஜார்க்கண்ட் முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் சாடியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்.-காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. பாஜகவும் ஜேவிஎம், ஏஜேஎஸ்யூ ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஜே.எம்.எம். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் தாம் போட்டியிட்ட தும்கா, பர்ஹெய்த் இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் 18 கோடி மக்கள் அன்றாட கூலிகள், நிலமற்ற விவசாயிகள். இவர்களால் சட்டப்பூர்வமான ஆவணங்களை எப்படி வைத்திருக்க முடியும்?
ஏழைகளிலும் ஏழையானவர்கள் வேலையை தேடுவார்களா? சட்டப்பூர்வமான ஆவணங்களைத் தேடுவார்களா? மக்களுக்கு பாஜகதான் பதில் சொல்ல வேண்டும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். அதேபோல தற்போது குடியுரிமையை நிரூபிக்கவும் மக்களை வரிசையில் நிற்க வைக்க விரும்புகிறதா பாஜக?
இவ்வாறு ஹேமந்த் சோரன் கேள்வி எழுப்பியுள்ளார்.