ஜார்க்கண்ட்: 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் டிச.29-ல் முதல்வராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ஜார்க்கண்ட் புதிய முதல்வராக டிசம்பர் 29-ந் தேதி ஜே.எம்.எம். கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார்.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது.
பாஜக 25 தொகுதிகளில் வென்றது. இதனையடுத்து ஆளுநரை சந்தித்த ஜே.எம்.எம். செயல் தலைவர் ஹேமந்த் சோரன், 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். வரும் 29-ந் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளேன் என்றார்.
சோனியாவுடன் இன்று சந்திப்பு
இதனிடையே காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் ஹேமந்த் சோரன் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது டிசம்பர் 29-ல் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் சோனியா பங்கேற்க ஹேமந்த் சோரன் அழைப்பு விடுக்க இருக்கிறார்,