ஜார்க்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன் .. ராகுல்..மம்தா..ஸ்டாலின். கனிமொழி என கலகலத்த விழா மேடை
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக பதவி ஏற்றார். இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் கடந்தஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக வெறும் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் ஹேமந்த் சோரன், தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இதையத்து ஆட்சி அமைக்க தேவையான அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஹேமந்த் சோரனை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தது. இதையடுத்து அவர் மொத்தம் 50 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் அளித்தார்.
இதையடுத்து முறைப்படி அம்மாநில ஆளுநர், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரனை முதல்வராக பதவிஏற்க வருமாறு அழைத்தார்
ஜார்க்கண்ட்- ஒரே மேடையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சங்கமம்... வலிமையான கூட்டணிக்கு வழிகாட்டுமா?
அதன்படி ராஞ்சியில் உள்ள மோஹராபதி மைதானத்தில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த விழாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் பல மாநிலங்களில் இருந்தும் எதிர்க்கட்சி தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர்