இந்தியாவில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு எஸ்கேப்பான மல்டி மில்லியனர்களின் பட்டியல்
இந்தியாவில் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களின் பட்டியலில் ஏராளமான தொழிலதிபர்கள் உள்ளனர்.
Recommended Video
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு சுவிட்சர்லாந்து தப்பியோடியது நீரவ் மோடி மட்டும் அல்ல. இதுபோல் ஏராளமானோர் மோசடிகளை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளனர்.
குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,000 கோடி மோசடி செய்துவிட்டு தற்போது ஸ்விட்சர்லாந்துக்கு ஓட்டம் பிடித்துள்ளார். அதுபோல் விஜய் மல்லையா, லலித் மோடி, தீபக் தல்வார் மற்றும் சஞ்சய் பண்டாரி ஆகியோர் பல்வேறு மோசடிகளை செய்து விட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டனர். அவர்கள் யார் என்பது குறித்தும் அவர்கள் செய்த மோசடி குறித்தும் பார்ப்போம்.
கிங்பிஷர் நிறுவனம்
இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9000 கோடி கடனை பெற்றுவிட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு லண்டன் தப்பி சென்றவர் கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா. கடந்த 2016 மார்ச் மாதம் அவர் வெளிநாடு தப்பி செல்வதை நிறுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை நாடின. எனினும் அவர் தப்பி சென்றார். அவர் இன்னும் லண்டனிலேயே உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து இந்திய போலீஸ் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும் ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸாரால் கைது செய்யப்படுவது அடுத்த சில நிமிடங்களில் ஜாமீனில் வெளியே வருவதுமாக இருக்கிறார்.
ஐபிஎல் டீம்
ஐ.பி.எல். போட்டியில் டெலிவிஷன் உரிமம் வழங்கியது, இலவச வர்த்தக விளம்பரம், பாதுகாப்பு ஏற்பாடு ஆகியவற்றில் லலித் மோடி முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ரூ.470 கோடி மோசடி புகார் கடந்த 2010-ஆம் ஆண்டில் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் கடந்தச 2011-ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. எனினும் தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வெளிநாடு செல்வதாக இங்கிலாந்து சென்றவர் அமலாக்கத் துறை இவர் மீது பதிவு செய்த அந்நிய செலாவணி மோசடி புகாரை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
பெருநிறுவன ஆலோசகர்
பெருநிறுவனங்களின் ஆலோசகராக உள்ள தீபக் தல்வார் மீது வருமான வரித்துறை 5 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அவருக்கு சொந்தமான தன்னார்வ அமைப்புக்கு கிடைத்த ரூ.90 கோடியை தவறாக பயன்படுத்தியது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட மோசடிகள் உள்ளன. தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார்.
வரி ஏய்ப்பு புகார்
இங்கிலாந்து, அரபு நாடுகளில் 150 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கியதை மறைத்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையும் சஞ்சய் பந்தாரி மீது வழக்கு பதிந்தது. இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் சென்றார். இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள், நகைகள் உள்ளிட்ட 26 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஆயுத தரகரான சஞ்சய் பண்டாரி மூலம் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துக்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் நேபாளம் வழியாக தப்பி சென்றுவிட்டார்.