கால்சென்டர் ஊழியர் பலாத்காரம்: குற்றவாளிகள் 2 நாளில் கைதானது எப்படி? விறுவிறு விசாரணை விவரம்
பெங்களூர்: கால்சென்டர் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி 2 நாட்களில் மடக்கிப்பிடிக்கப்பட்டனர் என்ற விறுவிறு தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பெங்களூர், பொம்மனஹள்ளியில் பணியாற்றும் ம.பியை சேர்ந்த, 23 வயது கால்சென்டர், பெண் ஊழியர் சனிக்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டார். இரவு 10.30 மணிக்கு டெம்போ வேனில் லிஃப்ட் கேட்டு ஏறிச் சென்றபோது, ஓடும் வேனில் அவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையால் 3 தனிப்படைகள் உருவாக்கப்பட்டன.
தீயாய் வேலை பார்த்த தனிப்படைகள்
போலீசாரிடம் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், வேன் பயணித்த ரோடுகளில் உள்ள சிசிடிவிகளை கொண்டு ஒரு தனிப்படை ஆய்வு நடந்தியது. மற்றொரு தனிப்படையோ, பெண் கொடுத்த வேன் பதிவு எண்ணை வைத்து, போக்குவரத்து துறை உதவியோடு அந்த வேனின் உரிமையாளரை தேடும் பணியில் ஈடுபட்டது.
உருவப்படம்
3வது படை, பொம்மனஹள்ளி, கோரமங்களா, மடிவாளா பகுதிகளில் டெம்போக்களை வாடகைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. மற்றொருபக்கம், குற்றவாளிகளின் உருவ அமைப்பு குறித்து, பெண்மணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஓவியர்களை கொண்டு, உருவப்படம் வரையும் பணிகள் நடந்தது.
வேன் பதிவு எண்
இதனிடையே, பெண் கூறியபடி, KA 03 B-1863 என்ற பதிவு எண் கொண்ட அந்த வேன் யாருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்திராநகரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வேன் அது என்பது தெரியவந்தது.
வாடகைக்கு ஓடிய வேன்
சங்கரிடம் விசாரணை நடத்தியபோது, எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் தனது வேன் இயங்கிவருவதாக தெரிவித்தார். எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்திடம் விசாரித்தபோது, பொம்மனஹள்ளியிலுள்ள, ஹெச்.ஜி.எஸ் என்ற பிபிஓ நிறுவனத்திற்கு அந்த வேனை வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தனர்.
டிரைவர் பெயர் சிக்கியது
சம்பவத்தன்று வேனை இயக்கியது யோகேஷ் என்ற டிரைவர் எனவும் டிராவல்ஸ் நிறுவனத்தில், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் யோகேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது உறவுக்காரர் சுனில் என்பவரோடு சேர்ந்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.
பாடலுடன் பலாத்காரம்
சம்பவம் நடைபெறும்போது, இருவரும் குடிபோதையில் இருந்ததாக யோகேஷ் தெரிவித்தார். நீளமாக இருக்கும், வேனின் கடைசி இருக்கையில் வைத்து பலாத்காரம் செய்ததாகவும், சத்தம் வெளியே கேட்காமல் இருக்க ஸ்டீரியோவில் பாடலை அதிக சப்தத்தில் பாடவிட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
மஃப்டியில் மடக்கிப்பிடிப்பு
சுனிலும், ஹெச்.ஜி.எஸ் கால்சென்டருக்காக எஸ்.ஆர்.எஸ் டிராவல்ஸ் சார்பில் வாகனத்தை இயக்குபவர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது சுனில், ஒன்றும் தெரியாதவனை போல, அடுத்த ஷிப்டுக்கு ஊழியர்களை அழைத்துவரச் சென்றிருந்த விஷயம் தெரியவந்தது. எனவே போலீசார் மஃப்டியில் அதே நிறுவனத்தில் காத்திருந்தனர். ஊழியர்களை அழைத்துக்கொண்டு சுனில் வந்ததும், போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.